"பெட்ரோல் ஊற்றி கொளுத்துங்க!" – பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்த நடிகை பிரகதி!
1994-இல் பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விஷேஷங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரகதி, அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசி, சமூகத்தில் பெரும் எதிரொலியை உருவாக்கியுள்ளார். “பெண்களுக்கு எதிராக அட்டூழியம் செய்பவர்களை பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும். அப்போது தான் பெண்ணைத் தவறாகத் தொட நினைப்பவர்கள் மனதில் பயம் ஏற்படும்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இளம் வயதிலேயே திரையுலகில் அடியெடுத்து வைத்த பிரகதி, ‘பெரிய மருது’ படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்னர் ‘ஜெயம்’, ‘சிலம்பாட்டம்’, ‘எத்தன்’, ‘தோனி’, ‘கெத்து’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பாற்றலை நிரூபித்தார். கடைசியாக, பிரபுதேவா நடித்த ‘பஹீரா’ படத்தில் தோன்றியுள்ளார்.
தமிழில் குறைவான படங்களே நடித்தாலும், தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றிய பிரகதி, திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது 49 வயதான இவர், உடல் கட்டுக்கோப்பிலும் ஆர்வம் மிகுந்தவர். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர், தனது ஆர்வத்தை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி, துருக்கியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பவர் லிஃப்டிங்கில் 4 பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
அண்மையில் அளித்த பேட்டியில், சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் வன்முறை, கொலை, மற்றும் அநீதி ஆகியவற்றை கண்டித்த பிரகதி, “இத்தகைய குற்றவாளிகள் இந்த பூமியில் வாழ்வதற்கே தகுதி இல்லாதவர்கள். அவர்கள் பூமிக்கே சுமை!” என்று கோபத்துடன் கூறினார்.
இவர் மேலும், “சட்டத்தின் தண்டனைகள் மட்டும் போதாது. குற்றவாளிகளுக்கு உண்மையான பயத்தை உருவாக்க வேண்டும். பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும்! அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது. மக்களிடையே மாற்றம் ஏற்பட வேண்டும்; குற்றவாளிகளின் மனதில் அச்சம் பதிய வேண்டும்!” என்று தைரியமாக தனது நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
பிரகதியின் இந்த தீவிரமான கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பல ரசிகர்களும், பெண்கள் உரிமை ஆர்வலர்களும் இவரது துணிச்சலான குரலுக்கு ஆதரவு தெரிவித்து, “இதுபோல பெண்கள் எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தேவை” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.